எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்

எனக்கான முதல்படி, ஜெகதீஷ் சார்தா, வென்ஃபீல்டு ஷர்ட்ஸ்




''ராஜஸ்தானில் இருக்கும் ஜெய்சல்மீர்தான் என் சொந்த ஊர். வேலை தேடி சென்னைக்கு வந்த எனது அண்ணன் துணிக்கடை ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்தார். அடுத்ததாக குடும்பக் கஷ்டம் காரணமாக நானும் சென்னைக்கே வந்துவிட்டேன். கல்லூரிப் படிப்பு வரை இங்கேதான் படித்தேன்.


படிப்பு முடிந்ததும் நானும் ஒரு துணிக் கடையில் சேல்ஸ்மேனாக வேலைக்குச் சேர்ந்துவிட்டேன். அப்படி சேல்ஸ்மேனாக வேலை பார்த்து சம்பாதித்தத் தொகையை சிறுகச் சிறுக சேர்த்து நண்பர்கள் உதவியுடன், சென்னை எக்மோரில் சின்ன அளவில் ஒரு ரெடிமேட் கடை திறந்தேன். இந்த கடைதான் என் வாழ்க்கையின் எல்லா வெற்றிகளுக்கும் முதல்படி.
கடையில் எல்லா வேலைகளையும் நான் ஒரே ஆள்தான் செய்வேன். கடை பூட்டிய பிறகு யாராவது வந்து நின்றாலும் திரும்ப திறந்து அந்த வியாபாரத்தை முடித்துவிட்டுதான் கடையைப் பூட்டுவேன். விரைவில் அடுத்தக் கட்டமாக மொத்த வியாபாரம் செய்யத் தொடங்கினேன். வாடிக்கையாளர்களை சரியாக கவனிப்பது எப்படி என சேல்ஸ்மேன் டிரெயினிங் கோர்ஸ் படித்தேன். அடுத்த கட்டமாக எனது தொழில் அனுபவம் கொடுத்த தைரியத்தில் ரெடிமேட் சட்டைகள் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கினேன்.
ரெடிமேட் துணி வியாபாரம் பெரிய அளவில் வளராத காலகட்டம் அது. ஆனாலும், தைரியமாக இறங்கி தரமான முறையில் ஆடைகளை தயார் செய்துதரத் தொடங்கினேன். எந்த ஏரியாவில் என்ன சட்டையை விரும்புவார்கள், எந்த வயது பிரிவினர் எந்த மாடலை விரும்புவார்கள் என பல ஊர்களுக்கும் மார்க்கெட் சர்வே நடத்த அலைந்திருக்கிறேன். எல்லாத் துணிகளையும் விற்பனை செய்தாலும் ஆண்களுக்கான சட்டைகள் மட்டும் வேகவேகமாக விற்பனையானதால், தொடர்ந்து அதில் தனிக்கவனம் செலுத்தத் தொடங்கினேன். எங்களுக்கான பிராண்ட் மதிப்பு உருவாகத் தொடங்கியது.
நமது துணிகளை இந்தியா முழுவதும் மக்கள் விரும்பி வாங்க வேண்டும் என்கிற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்ததால் மும்பையில் ஒரு கடையைத் திறந்தேன். அங்கு நல்ல வரவேற்பு இருந்ததால் அடுத்ததாக டெல்லி, கொல்கத்தா என ஷோரூம்களைத் தொடங்கினோம். இன்று வெளிநாடுகளிலும் எங்களது ஆடைகளை விரும்பி வாங்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். தையல்காரரிடம் தைத்த திருப்தி, ஃபினிஷிங், குறைந்த விலை என இளைய தலைமுறையின் ரசனைக்கு ஏற்ப உடைகளைக் கொடுத்தது எனது நிறுவனத்தின் வளர்ச்சிக்கு அடித்தளமாக அமைந்தது.''

பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி

 பெயர்கள் கொடுத்த உற்சாகம். எம்.ஜே.பிராதாப் சிங் - ஈகிள் டைரி



''சின்ன அளவில் ஒரு பிரின்டிங் பிரஸ் வைத்திருந்தேன். ஏற்கெனவே செய்துதந்த வேலைகளுக்குப் பணம் சரியாக வராமல் தொழில் முடங்கி விடக்கூடிய நிலைமை ஏற்பட்டது. அப்போதுதான் நமக்கென்று சொந்தமாக ஒரு புராடக்ட் இருந்தால் ஜெயிக்கலாம் என்ற சிந்தனை எனக்குள் உருவானது.

அட்வகேட் டைரி தயாரிக்கலாம் என்று நண்பர்கள் யோசனை சொன்னார்கள். அந்த புத்தாண்டில் எனக்குத் தெரிந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுப்பதற்காக டைரிகளை வாங்கி அதில் அந்த நண்பர்களின் பெயரை அச்சடித்துக் கொடுத்தேன். டைரியில் தங்களது பெயர்களைப் பார்த்த நண்பர்களுக்கு ஒரே மகிழ்ச்சி. அதேபோல எங்களுக்கும் செய்து கொடுங்கள் என்று பலரும் கேட்டனர். இதனால் நானும் உற்சாகமாகி, இந்த தொழிலில் முழுமையாக இறங்கினேன்.

பிறகு சொந்தமாகவே டைரி தயாரிக்கத் திட்டமிட்டேன். அப்போது சந்தையில் கிடைத்த டைரிகளை வகைக்கு ஒன்றாக வாங்கி, வந்து டிசைன் பார்த்து, அவற்றிலிருந்து சிலவற்றை மேம்படுத்தி எனது பிரின்டிங் பிரஸில் புதுமையாகத் தயாரித்தேன். அடுத்தடுத்த வருடங்களில் இரண்டு, மூன்று மாடல்களில் டைரியை தயாரித்துத் தரும் அளவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நிறுவனமாக ஏறி இறங்கி, நானே ஆர்டர் பிடித்து வருவேன். விடிய விடிய ஆட்களோடு உடனிருந்து பிரின்டிங் வேலைகளைப் பார்ப்பேன்.

தரமான பேப்பர், குறைந்த விலை, புதுமையான மாடல் என்பதுதான் எனது நோக்கமாக இருந்தது. பிரின்டிங், பைண்டிங் என ஒவ்வொரு தொழில்நுட்பமும் மாறமாற அதை கற்றுக்கொள்வதற்கு சளைத்ததேயில்லை. பிரின்டிங் தொடர்பான எந்த கண்காட்சி என்றாலும் உடனே ஆஜராகிவிடுவேன். இதற்காக வெளிநாடுகளுக்குகூட போனேன். எனது ஈகிள் டைரி இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு பிராண்டாக வளர்வதற்கு எனது கடுமையான உழைப்பும், நம்பிக்கையுமே காரணம்.

ஒரே ஒரு மெஷினோடு வாழ்க்கையைத் தொடங்கிய நான், இன்று நவீன எந்திரங்களைக் கொண்டு மணிக்கு மூவாயிரம் டைரிகள் தயாரிக்கும் அளவுக்கு வளர்ந்திருக்கிறேன்; இன்னும் வளர்வேன்!''

என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை

திருப்புமுனை! - என்னை மாற்றிய ஐ.ஐ.எம். வாசிமலை, தானம் அறக்கட்டளை



''வீட்டில் இருந்த கண்டிப்பும் ஒழுங்கும் சின்ன வயதிலிருந்தே என்னை பக்குவப்படுத்தியது. நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், சொத்து சேர்க்க வேண்டும் என்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. விவசாயம் படித்துவிட்டு மேற்கொண்டு படிக்க ஐ.ஐ.எம்.-ல் சேர்ந்தேன். அங்கு நம்மை பற்றி சுயமதிப்பீடு செய்யும் சில பாடங்கள் இருந்தது. அந்த பாடங்களைப் படித்தபோது நான் யார், அடுத்து என்ன செய்யப் போகிறேன்? என்பது போன்ற கேள்விகள் எழுந்தது. நம்மால் நான்கு பேர் பயனடையக்கூடிய செயல்களைச் செய்ய வேண்டும் என்கிற எண்ணம் ஏற்பட்டது. அதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனை.


அப்போது சிறப்பாகச் செயல்பட்டுவந்த ஒரு தன்னார்வ நிறுவனத்தில் சேர்ந்து பணியாற்றினேன். அங்கு தன்னார்வப் பணியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதுதான் எனது பணி. அந்த நிறுவனத்தின் தமிழக திட்ட ஒருங்கிணைப்பாளராகவும் நான் செயல்பட்டேன். கிராமம் கிராமமாகச் சென்றதினால் பல்வேறு பகுதி மக்களுடைய அனுபவம், வாழ்க்கைமுறை, அவர்களுடைய தேவைகளை அறிந்துகொள்ள முடிந்தது.
இந்த அனுபவத்தின் உந்துதலால்தான் என்னைப் போல தன்னார்வ வாழ்க்கையை விரும்பிய சிலரோடு சேர்ந்து மதுரையில் தானம் அறக்கட்டளையைத் தொடங்கினோம். இந்த அறக்கட்டளை மூலம் களஞ்சியம் என்ற மகளிர் சுயஉதவி குழுவை ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினோம். களஞ்சியம் அமைப்பு இப்போது பன்னிரண்டு மாநிலங்களில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட ஒருங்கிணைப்பு குழுக்களைக்கொண்டு இயங்கி வருகிறது.
அடுத்ததாக கிராமப்புற நீர்நிலைகளை மேம்படுத்தும் நோக்கில் வயலகம் என்கிற அமைப்பைச் செயல்படுத்தத் தொடங்கினோம். முறையான நிர்வாக அமைப்பு, மேலாண்மை வழிகாட்டலோடு இணைந்த மேம்பாட்டு திட்டங்கள்தான் எங்களது நோக்கமாக இருந்தது. எங்களது அடுத்தகட்ட முயற்சியாக சுகம் என்கிற பெயரில் மக்கள் மருத்துவமனையை மதுரையில் செயல்படுத்தி வருகிறோம்.
தன்னிறைவு பெற்ற சமுதாயத்தை உருவாக்க நமக்கு நாமே உதவிக்கொள்வோம் என்கிற எங்களது முயற்சி உலகம் முழுக்கப் போய் சேரவேண்டும் என்பதே எனது ஆசை.''

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.

தேடல், தேவை, வெற்றி! ஜி.எஸ்.கே.வேலு. ட்ரிவிட்ரான் ஹெல்த்கேர்.


'நடுத்தர வசதி கொண்ட குடும்பத்தில்தான் பிறந்தேன். அப்பா ஆரல்வாய்மொழியில் நூலகராகப் பணியாற்றினார். எனக்கு மருத்துவராக வேண்டும் என்பது ஆசை. ஆனால், அதற்கான வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. மருத்துவத் துறை சார்ந்த படிப்பையாவது படிக்க வேண்டும் என நினைத்து, 'பார்மஸி அண்ட் பயோமெடிக்கல்’ என்ற படிப்பை டெல்லிக்குச் சென்று படித்தேன். அதற்கான பயிற்சிக்காக சென்னை புற்றுநோய் மருத்துவமனைக்கு வந்தேன். அப்போதுதான் மருத்துவத் துறையில் நவீன கருவிகளின் தேவை, பயன்பாடு போன்றவற்றை நுட்பமாகப் புரிந்துகொள்ள முடிந்தது.


நவீன மருத்துவ வசதிகளுக்காக மிகுதியான மக்கள் சென்னைக்கு வருவதை உணர்ந்து கொண்டேன். எனவே, இதையே தொழிலாகவும், சேவையாகவும் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தேன். நவீன மருத்துவ கருவிகளை இறக்குமதி செய்து விற்பனை செய்யத் திட்டமிட்டேன். இதற்கான அனுபவத்தைப் பெற மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்து விநியோகம் செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகு மருத்துவக் கருவிகளைத் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றில் ஏழு ஆண்டுகள் பணியாற்றி இத்தொழிலைக் குறித்த விவரங்களை தெளிவாக அறிந்து கொண்டேன். அதன்பிறகே தனியாக நிறுவனத்தைத் தொடங்கினேன்.
எனது இலக்கு மாநகரங்களைத் தாண்டி இரண்டாம் நிலை நகரங்களில் உள்ள மருத்துவமனைகளாகத்தான் இருந்தது. அவர்களுக்கு நவீன மருத்துவக் கருவிகள் குறித்த தேவையை உணர்த்தினேன். விற்பனைக்குப் பிறகான சேவையை வெளிநாட்டு நிறுவனங்கள் தந்ததைவிட துரிதமாகவும், தரமாகவும் தந்தேன். அடுத்த சில ஆண்டுகளில் நான் ஒப்பந்தம் செய்துவைத்திருந்த சில நிறுவனங்கள் விலகியதால் ஒரு திடீர் நெருக்கடியைச் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும், அதையே உந்துசக்தியாகக் கொண்டு சொந்தமாக கருவிகளைத் தயாரிக்கத் தொடங்கினேன். படிப்படியான வளர்ச்சியால் இப்போது மருத்துவக் கருவிகள் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்திய நிறுவனங்களில் முதலிடத்தில் இருக்கிறோம்; வெளிநாட்டு நிறுவனங்களோடு ஒப்பிடுகையில் நான்காவது இடத்தைப் பிடித்திருக்கிறோம்.
நவீன மருத்துவக் கருவிகளின் பயன்பாடு நமது கிராமப்புறங்களுக்கும் செல்ல வேண்டும் என்பதுதான் என் ஆசை. விரைவில் அந்த இலக்கை எட்டிப் பிடிப்பேன்!''

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.

புதுமை தந்த வெற்றிக் கனி! நடராஜன், கோவை பழமுதிர் நிலையம்.



''குடும்பச் சூழல் காரணமாக சிறு வயதிலிருந்தே பட்டறை, மில் என பல இடங்களில் வேலை பார்த்திருக்கிறேன். அப்படியான பணி பயணத்தில் ஒரு அத்தியாயம்தான், பழ வியாபாரம். ஆனால், காலப்போக்கில் இந்த தொழிலே நிலைத்து நின்றுவிட்டது. தலைச்சுமையாக, தள்ளுவண்டியில், தரைக்கடையாக மிகப் பெரிய உழைப்பைச் செலுத்திதான் வளர்ந்தேன்.அதிக ரிஸ்க் கொண்டது பழ வியாபாரம். இந்த தொழிலில் விற்பனையில்லை என்றால் பொருளும் மிஞ்சாது, போட்ட முதலீடும் மிஞ்சாது. பழ வியாபாரத்தில் உள்ள ரிஸ்க்குகளைக் குறைக்க வேண்டும்;  மக்களும் விரும்பி வாங்க வேண்டும் என்று யோசித்து நவீன முறைக்கு மாறினேன்.

வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகள் தருவதுகூட ஒரு வகையில் ரிஸ்க்தான். விலை அதிகமாக இருக்கும் என்று கடைக்குள் நுழைய மாட்டார்கள். ஆனால், சராசரியான விலையிலேயே தரமான பழங்கள் என்று நான் தரத் தொடங்கினேன். கோவையில் தொடங்கிய கடை வியாபாரம் நல்லபடியாக இருந்தது. அடுத்து, திருப்பூரில் இதே பாணியில் ஒரு கிளை தொடங்கினேன். அங்கும் மக்களின் ஆதரவு நன்றாக இருக்கவே, அடுத்ததாக சென்னையில் ஒரு கிளை தொடங்க திட்டமிட்டேன்.

சென்னையில் தொடங்கும் முன்பு கோயம்பேடு மார்க்கெட்டுக்குச் சென்று வாடிக்கையாளர்களுக்கு ஏற்படும் குறைபாடுகளை உன்னிப்பாக கவனித்தேன். பழம் காய்கறி வாங்குவதுகூட ஒரு இனிமையான ஷாப்பிங் அனுபவமாக மாற வேண்டும் என அடுத்தடுத்து தொடங்கிய எல்லா கிளைகளிலும் குளிர்சாதன வசதி, வாடிக்கையாளர்களே தேர்ந்தெடுக்கும் வசதி என பழ வியாபாரத்தை ஹைடெக்காக மாற்றினேன்.

இப்போது தமிழ்நாட்டில் நாற்பது இடங்களில் கிளைகள் உள்ளது. அடுத்ததாக, கேரளாவில் தொடங்க இருக்கிறோம். 2006-ல் எனது மகன் செந்தில் இந்த தொழிலுக்கு வந்தபிறகு, வெளிநாடுகளிலிருந்து பழங்கள் இறக்குமதி செய்யும் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தினோம்.

இப்போது நாளன்றுக்கு 200 டன்கள் விற்பனையாகும் அளவுக்கு வளர்ந்திருக்கிறோம். மக்களின் தேவையை அறிந்து, அவர்கள் விருப்பங்களை நிறைவேற்ற சிரத்தை எடுத்துக்கொண்டால் நிச்சயம் ஜெயிக்கலாம் என்பது என் அனுபவம்.'' 

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.

திருப்புமுனை - மக்களை நாடினோம்; வெற்றி கிடைத்தது! - பிரதீப், மெடிமிக்ஸ்.


1983-ல் இந்த வேலைகளை செய்ய நான் பொறுப்பெடுத்துக்கொண்ட பிறகு, குடும்பத் தொழிலாக இருந்ததை விரிவுபடுத்தி ஒரு நிறுவனமாக மாற்றினேன். மருந்துக் கடைகளில் மட்டுமல்லாமல் மளிகைக் கடைகளிலும் விற்பனைக்குத் தந்தோம். மக்களிடம் எளிதில்கொண்டு சேர்க்க, சாம்பிள் சோப் செய்தோம். இது நல்ல விளம்பரமாக அமைந்தது. அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களும், ஓட்டல்களில் தங்கும் பயணிகளும் ஒருமுறை பயன்படுத்திப் பார்த்துவிட்டு, பிறகு எங்கள் சோப்பை தொடர்ந்து வாங்கத் தொடங்கினார்கள்.

விற்பனை அதிகரிக்கத் திட்டமிட்டு, தமிழர்கள் வசிக்கிற இடங்களில் எல்லாம் மார்க்கெட்டிங் செய்தோம். குவைத், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் தமிழர்கள் கொடுத்த ஆதரவு காரணமாக அடுத்தடுத்து வெளிநாடுகளுக்கும் சோப் ஏற்றுமதி செய்ய ஆரம்பித்தோம். தற்போது 25 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறோம். குறிப்பாக, தைவான் நாட்டில் எங்கள் தயாரிப்புதான் முன்னணி பிராண்ட்.

மருத்துவ குணம் பொருந்திய சோப் விற்பனையில் தனி இடத்தைப் பிடித்ததும், நகரங்களில் மட்டுமில்லாமல் கிராமச் சந்தையை உருவாக்கியதும் எங்கள் சாதனையாகவே நினைக்கிறோம். இன்று வெளிநாட்டு நிறுவனங்களின் பல பிராண்டுகள் சந்தையில் போட்டி போட்டாலும், மக்கள் எங்கள் சோப் மீது வைத்துள்ள நம்பிக்கை அதிகம். உண்மையாகவும், கடுமையாகவும் உழைத்தால் வெற்றி நிச்சயம். அதுதான் ஆயிரம் ரூபாய் முதலீட்டில் தொடங்கப்பட்ட இந்த தொழிலை நூறு கோடிக்கும் அதிகமாக டேர்னோவர் செய்யும் நிறுவனமாக மாற்றியிருக்கிறது!'' 

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.

விடாப்பிடி உழைப்பு - வி.கே.டி. பாலன், நிர்வாக இயக்குநர், மதுரா டிராவல்ஸ்.


நான் அதிகம் படிக்கவில்லை; ஆனாலும் நான் ஜெயித்தேன். காரணம், என் விடாப்பிடியான உழைப்பு.

ஆரம்பத்தில் ஒரு டிராவல்ஸ் நிறுவனத்தில் தினசரி ஐந்து ரூபாய் கூலிக்கு வேலையில் சேர்ந்தேன். வெளிநாட்டுக்கு செல்பவர்களின் பாஸ்போர்ட், விசா போன்றவற்றை உரியவர்களிடத்தில் கொண்டுபோய் சேர்ப்பதே என் வேலை. அந்த வேலையை செய்துகொண்டிருந்தபோதுதான் எனக்கான திருப்புமுனை வந்தது.
ராமேஸ்வரத்திலிருந்து கொழும்புக்கு தினசரி பயணிகள் கப்பல் சென்றுவரும். அந்த கப்பலில் செல்கிற வியாபாரிகளுக்குத் தேவையான விசாவை நான் வேலை பார்த்த நிறுவனம் வாங்கித் தந்தது. இந்த விசாவை தர ஒருமுறை நான் ராமேஸ்வரம் போனேன்.

 நான் போன ரயில் ராமேஸ்வரத்திற்கு அருகில் பாம்பன் தூக்கு பாலம் ரிப்பேர் காரணமாக மண்டபம் ரயில் நிலையத்திலேயே நின்றுவிட்டது.  பஸ் பாலம் அப்போது இல்லை. காலை ஒன்பது மணிக்குள் பயணிகளுக்கான  பாஸ்போர்ட், விசாவை அவர்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்.
நான் எப்படியாவது இந்த வேலையை முடிக்க வேண்டும் என்று நினைத்தேன். உடனே ரயில் தண்டவாளத்தில் நடக்கத் தொடங்கினேன். பாலத்தைக் கடந்துவிட்டால் எப்படியாவது துறைமுகத்தை அடைந்துவிடலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.
ஆனால், பாலத்தைக் கடப்பது சாதாரணமாக இல்லை. கடல் சீற்றமாக இருந்தது. இரும்பு பாலத்தின் வழி நெடுக கிரீஸ் தடவியிருந்ததால் கால் வழுக்கியது. திரும்பிப் போகலாம் என்றால் கஷ்டப்பட்டு பாதித் தூரத்தைக் கடந்திருந்தேன். திரும்பிச் செல்கிற தூரத்தை முன்னேறிச் செல்வோம் என்கிற துணிவோடு, சூட்கேஸை முதுகோடு கட்டிக்கொண்டு பாலத்தில் தவழ்ந்தபடி கடந்து போனேன்.

கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துகிறோம், எப்படி தக்க வைத்துக்கொள்கிறோம் என்பதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது.

தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்

தோல்விகள் கொடுத்த வெற்றி - அருண் விஜய் நடிகர்



நான் சினிமாவுக்கு வந்தபோது எனக்கான மெச்சூரிட்டி குறைவுதான். எப்படி நடித்தால் படம் ஓடும், எந்த மாதிரியான கதைகளை தேர்வு செய்யவேண்டும் என்று எனக்கு ஆராயத் தெரியவில்லை. என் வளர்ச்சியில் என் அப்பா கவனம் செலுத்தினார் என்றாலும் வெற்றியின் அடிப்படை எனக்குப் பிடிபடாமலேயே இருந்தது. நடிப்பு, நடனம், சண்டை என சினிமாவுக்குத் தேவையான அம்சங்களை சரியாகத்தான் தந்தேன். ஆனால், நல்ல நடிகனாக முன்னுக்கு வரமுடியவில்லை. எவ்வளவு உழைப்பை கொடுத்தாலும் சரியான அங்கீகாரம் இல்லை.

திரைத் துறையின் சூட்சுமங்களைக் கற்றுக்கொள்ள எனக்கு சில காலம் பிடித்தது. நடிக்க வந்த காலந்தொட்டு இதுவரை 18 படங்கள் மட்டுமே செய்திருக்கிறேன். ஆனால், என்னோடு சமகாலத்தில் வந்த நடிகர்கள் இன்று முன்னணி நட்சத்திரங்களாகி விட்டனர். இதை பார்க்கும் எனக்கு நான் இன்னும் வேகமாக ஓடவேண்டும் என்கிற உந்துதலைக் கொடுக்கிறது.
சினிமாவுக்கு வந்துவிட்டோம், இதில் சாதிக்காமல் ஓயக்கூடாது என்கிற மனநிலை எப்போதும் இருந்து கொண்டே இருந்தது. அந்த வகையில் எனக்கான திருப்புமுனையாக பாண்டவர் பூமி படம் அமைந்தது. அதற்கு பிறகுதான் எனக்கான கதைக் களத்தை சரியாக அமைத்துக்கொள்ள ஆரம்பித்தேன்.
தோல்வி என்று எதுவும் கிடையாது, நாம் வெற்றியை நோக்கி ஓடுகிறோம் என்கிற மனநிலையில் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். கண்டிப்பாக நம் உழைப்புக்கான பலன் ஒரு நாள் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருந்தது. நமது திறமையின் மீது நமக்கு நம்பிக்கை வரும்போதுதான் வெற்றியும் தேடி வரும். இந்த காலகட்டங்களில் வந்த படங்கள் அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்தது.
கடைசியாக வந்த 'தடையறத் தாக்க' திரைப்படம் எனக்கு எல்லா மட்டத்திலும் சிறந்த நடிகன் என்று பெயர் வாங்கி கொடுத்தது. எனது திரையுலக வாழ்க்கையின் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இதன் இயக்குநர் ஏற்கெனவே எடுத்த ஒரு படம் தோல்வி. எனக்கு வெற்றி கொடுத்தாக வேண்டிய கட்டாயம். அவர் எனது உழைப்பின் மீது நம்பிக்கை வைத்தார். நான் அவரது திறமையின் மீது நம்பிக்கை வைத்தேன்.

நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.

நம்பிக்கை தந்த போன்! - ஆண்டனி ராஜ், தொலைக் காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்.


ஐஸ்கிரீம் கடை, ஓட்டல் நடத்துவது, தமிழகத்திலிருந்து சினிமாவை வாங்கி மும்பையில் திரையிடுவது, புத்தக விற்பனை என ஒன்றுக்கொன்று சம்பந்தம் இல்லாமல் பல வேலைகள் செய்தும், எதிலும் எனக்கு திருப்தி இல்லை. எனக்கான வேலை இதுவல்ல என்று மட்டும் என் மனம் சொல்லிக்கொண்டே இருந்தது. மேற்கொண்டு அந்த வேலையை செய்யப் பிடிக்காமல் அடுத்த வேலையை செய்ய ஆரம்பித்துவிடுவேன். ஆனால், நானும் ஒருநாள் வெற்றியாளனாக வலம் வருவேன் என்கிற நம்பிக்கை மட்டும் இருந்துகொண்டே இருந்தது.
பிழைப்புக்காக மும்பை போய், அங்கிருந்து சென்னை திரும்பியபிறகு தொலைக்காட்சியில் சின்ன சின்னதாக பல நிகழ்ச்சிகளைத் தயாரித்தேன். ஆனால், அதன் மூலம் பெயரோ, வருமானமோ எனக்கு கிடைக்கவில்லை. இந்த நேரத்தில் ஒரு ஆங்கிலப் பத்திரிகையில் அமிதாப்பச்சனின் பேட்டியை படித்தேன். 'நீ வெற்றியாளனாக இருக்கும்போது உன் வீட்டில் பூங்கொத்துகள் நிரம்பி வழியும். உன் வீட்டில் பூங்கொத்துகளின் எண்ணிக்கை எப்போது குறைகிறதோ, அப்போது நீ சரியத் தொடங்கிவிட்டாய் என்று அர்த்தம்!’ என நடிகர் ராஜேஷ்கன்னாவின் வாழ்க்கையோடு ஒப்பிட்டுப் பேசியிருந்தார் அமிதாப்.
இந்த பேட்டி எனக்கு ஒரு உத்வேகத்தைக் கொடுத்தது. ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியையும் பாய்ச்சலையும் எனக்குள் ஏற்படுத்தியது. அப்போது என் நண்பர் சாய்ராம் நீயா, நானா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் நான் இணைந்துகொண்டதுதான் என் வாழ்க்கையின் திருப்புமுனைக்கான முதல் படி.
இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகத் தொடங்கி சில வாரங்கள்  கழிந்தபிறகும் வரவேற்பு இல்லாமலே இருந்தது. வரவேற்பு இருந்தால்தானே வாய்ப்புகள் இருக்கும். மீண்டும் புதிய முயற்சிகளோடு வாய்ப்புகள் தேடுவது சாமானிய வேலையில்லையே என்று யோசித்துக் கொண்டிருந்த வேளையில், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்திடமிருந்து போன் வந்தது. ''நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இன்னும் சிறப்பாகச் செய்யுங்கள்'' என்றார்கள். என் உழைப்பின் மீது முழுநம்பிக்கை வந்த தருணம் அதுதான். எனக்கான களம் இதுதான் என்று எனக்கே நம்பிக்கை கொடுத்தது இந்த நிகழ்ச்சிதான்.

அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!

மியூச்சுவல் ஃபண்ட் : அள்ளித் தரும் எஸ்ஐபி முதலீடு... கவனிக்க வேண்டிய விஷயங்கள்!


எஸ்.ஐ.பி - முன்பு ஒரு சிலருக்கே தெரிந்த வார்த்தையாக இருந்தது, இன்றைக்கு பலரும் அடிக்கடி கேள்விப்படுகிற வார்த்தையாக மாறி இருக்கிறது. ஏழையைக்கூட பணக்காரராக மாற்றிவிடும் மந்திர சக்தி கொண்டது எஸ்.ஐ.பி. சிறு துளி, பெரு வெள்ளம் என்பதற்கு இனி எஸ்.ஐ.பி.யை உதாரணமாக சொல்லலாம். இந்த எஸ்.ஐ.பி.யை  பற்றி எல்லோருக்கும் எடுத்துச் சொல்லத்தான் இந்தக் கட்டுரை.

நம்மில் பெரும்பாலோர் மாதாந்திர சம்பளம் பெறுபவர்கள் அல்லது சொந்தத் தொழில் செய்பவர்கள். நம்மால் ஒவ்வொரு மாதமும் ஒரு சிறிய தொகையை நமது எதிர்காலத் தேவைகளுக்காக ஒதுக்கி சேமிக்க/ முதலீடு செய்ய முடியும்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் அவ்வாறு மாதம்தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ச்சியாக செய்யும் முதலீட்டைத்தான் எஸ்.ஐ.பி (SIP – Systematic Investment Plan) என்கிறோம்.

இந்த முறை கடந்த பல ஆண்டுகளாக நம்மிடையே இருந்தாலும், கடந்த நிதி ஆண்டில் நமது மக்களிடம் மிகவும் பாப்புலராகி உள்ளது. செபி/ ஆம்ஃபி/ கேம்ஸ் அமைப்புகள் தரும் புள்ளி விபரங்களின்படி, கிட்டத்தட்ட ஒரு கோடி எஸ்.ஐ.பி இன்று உள்ளன.   கடந்த காலத்தில்  மாதமொன்றுக்கு சுமார் ரூ.2,000 கோடி என்கிற அளவில் எஸ்.ஐ.பி மூலமாக வந்த முதலீடு தற்போது மாதத்துக்கு ரூ.3,500 கோடியை எட்டியுள்ளது. இந்த உயர்வு கடந்த வருடத்தில் பங்குச் சந்தை பெரிய வருமானம் எதுவும் தராத சமயத்தில் நடந்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

எத்தனை ஃபோலியோக்கள் (கணக்குகள்) உள்ளன/ புதிதாக திறக்கப்பட்டுள்ளன என்பதும் மியூச்சுவல் ஃபண்டுகளின் வளர்ச்சியைக் காண்பிக்கும் ஒரு அளவுகோலாகும்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பங்கு சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 1,58,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன.  அதே போல், கடன் சார்ந்த திட்டங்களில் கிட்டத்தட்ட 2,25,000 புதிய ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இன்றைய தினத்தில் நம் நாட்டில்  மியூச்சுவல் ஃபண்டில் இருக்கும் மொத்த ஃபோலியோக்களின் எண்ணிக்கை சுமார் 4.80 கோடிக்கு மேல்.

உள்நாட்டு வரத்து அதிகரித்து வருவது, நமது பொருளாதாரத்துக்கு ஒரு பெரிய பலமாகும். மேலும், நமது பங்குச் சந்தையில் உள்ள ஏற்ற இறக்கத்தை இது வெகுவாகக் குறைக்கும் – ஏனென்றால் இந்த வரத்து சிறு முதலீட்டாளர் களிடமிருந்து நீண்ட கால முதலீட்டுக்காக வருகிறது.



எஸ்.ஐ.பி முறையிலான முதலீட்டில் பல சாதகங்கள் உள்ளன. வாங்கும் விலையை சராசரி செய்வது, சிறு சிறு தொகையாக சேமித்து முதலீட்டைப் பெருக்குவது, முதலீட்டு ஒழுக்கத்தை கொண்டு வருவது, சென்டிமென்ட்டுகளைத் தவிர்ப்பது, முதலீட்டுக்குப்பின்  செலவு என்ற பழக்கத்தைக் கொண்டு வருவது, நீண்ட காலத்தில் பணவீக்கத்தை தாண்டிய வருமானம் என பல சாதகங்கள் உள்ளன. எனவேதான் எஸ்.ஐ.பி முதலீடு பல தரப்பட்ட மக்களிடமும் பாப்புலராகி வருகிறது.

மியூச்சுவல் ஃபண்டுகளில், எஸ்.ஐ.பி முறையில் அனைத்து வகை சொத்துக்களிலும் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு,  பங்கு சார்ந்த திட்டங்கள், கடன் சார்ந்த திட்டங்கள், தங்கம், வெளிநாட்டு ஃபண்டுகள் போன்ற பல வகையான சொத்துக்களிலும் எஸ்.ஐ.பி முதலீட்டு முறை உண்டு.

உங்களின் நீண்ட காலத் தேவைகளுக்கு பங்கு சார்ந்த திட்டங்களில் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம். குறுகிய காலத் திட்டங்களுக்கு கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்து கொள்ளலாம்.

உதாரணத்துக்கு, உங்களின் தேவைகளான பண்டிகை காலச் செலவுகள், எமர்ஜென்ஸி ஃபண்டுகள், பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டணங்கள், இன்ஷுரன்ஸ் கட்டணங்கள் போன்றவற்றுக்காக லிக்விட் மற்றும் அல்ட்ரா ஷார்ட் டேர்ம் ஃபண்டுகளில் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமித்து வரலாம். எப்போது பணம்  தேவைப்படுகிறதோ, அப்போது பணத்தை திரும்ப எடுத்துக் கொள்ளலாம். இப்படி திரும்ப எடுப்பதற்கு எந்தவிதமான அபராதமும் கிடையாது.

இப்படி முதலீடு செய்து வைக்கும் பணத்துக்கு வங்கி சேமிப்புக் கணக்கைவிட அதிகமான வட்டி கிடைக்கும். பணம் தேவையென்று சொன்ன அடுத்த நாள் காலையில் உங்கள் வங்கிக் கணக்கில் பணம் இருக்கும்!


ரிலையன்ஸ் போன்ற சில ஃபண்ட் நிறுவனங்கள் விசா டெபிட் கார்டைக்கூட இந்த விதமான திட்டங்களுடன் வழங்குகின்றன. ஐசிஐசிஐ போன்ற இன்னும் சில நிறுவனங்கள் இதுபோன்ற திட்டங்களுடன் இணைத்து மெடிக்கல் எமர்ஜென்ஸி செலவு வசதிகளையும் வழங்குகின்றன.

எஸ்.ஐ.பி-யில் பல விதமான கால இடைவெளிகளில் நம்  முதலீட்டை செய்துகொள்ளலாம். உதாரணமாக, தினசரி, வாராந்திரம், மாதாந்திரம், காலாண்டுக்கு/ அரையாண்டுக்கு / ஓராண்டுக்கு ஒருமுறை என பல இடைவெளிகளில் இன்று முதலீட்டாளர்கள் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யலாம்.

மேலும், சில ஃபண்ட் நிறுவனங்கள், எஸ்.ஐ.பி-க்கு மாதத்தில் எந்த தேதியை வேண்டுமானாலும் தேர்வு செய்துகொள்ளும் வசதியையும் அறிமுகப்படுத்தியுள்ளன.

எஸ்.ஐ.பி முறை மூலம் முதலீடு செய்வதற்கு உச்சபட்ச தொகை ஏதும் கிடையாது. எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்து கொள்ளலாம். ஓரிரு நிறுவனங்களில் குறைந்தபட்ச தொகை ரூ 100-ஆக உள்ளது. பல நிறுவனங்களில் குறைந்த பட்சமாக ரூ 500 அல்லது ரூ 1,000 உள்ளது. இன்றைய நிலையில் இந்தத் தொகையில் எந்த இந்தியப் பிரஜையாலும் முதலீடு செய்ய முடியும் என்பதே உண்மை.

அதேபோல், எஸ்.ஐ.பி-யில் குறைந்தபட்ச முதலீடு 6 தவணைகளாக இருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இருக்கலாம். அல்லது கேன்சல் செய்யும்வரை தொடர்வதற்கு எழுதிக் கொடுக்கலாம்.

தொழில் செய்யும் பலரும், எங்களால் எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்ய முடியாது. எங்களுக்கு எவ்வளவு வருமானம் வரும் என்று தெரியாது என்று பல காரணங்களைக் கூறி முதலீடு செய்வதைத் தவிர்த்து வருகிறார்கள். இன்றைய தினத்தில் ஒரு எஸ்.ஐ.பி  மூலம்   முதலீடாகும் தொகை சராசரியாக ரூ.3,000-ஆக உள்ளது. ஒவ்வொரு மாதமும் ரூ.3,000-யை முதலீடு செய்ய முடியாவிட்டாலும் ரூ.2000-த்தையாவது தொழில் செய்பவர்கள் முதலீடு செய்யலாமே!

எஸ்.ஐ.பி எவ்வளவு நாட்களுக்குப் போடலாம் என்ற சந்தேகம் பலரின் மனதிலும் எழும். எஸ்.ஐ.பி ஆரம்பிக்கும் போது, முடிவு தேதி உங்களின் இலக்குகள் வரையிலான தேதியாக இருக்கட்டும். அல்லது பங்கு சார்ந்த திட்டங்களாக இருக்கும்போது இலக்குகளுக்கு ஓரிரண்டு ஆண்டுகள் முன்னதாக இருக்கட்டும். இல்லையென்றால் முடிவு தேதியை 2099 அல்லது கேன்சல் செய்யும் வரை என்று போட்டுவிட்டால் பிரச்னையே இல்லை.



எஸ்.ஐ.பி முறையில் முதலீடு செய்யும்போது எண்டோவ் மென்ட்/ யூலிப் பாலிசிகளைப் போல கவலை கொள்ள வேண்டாம். ஒரு மாத நோட்டீஸில் எஸ்.ஐ.பி-யை எப்போது வேண்டுமானாலும் கேன்சல் செய்துகொள்ளலாம். சிலர் 12 மாதத்துக்கு எஸ்.ஐ.பி காலத்தை வைத்துக் கொள்கிறேன்; பிறகு ஃபண்ட் எவ்வாறு செயல் படுகிறதென்று பார்த்து விட்டு புதுப்பித்துக் கொள்கிறேன் என்று கூறுகிறார்கள். நீங்கள் பிஸியாக இருப்பவர் என்றால் அவ்வாறு செய்யாதீர்கள்! பல சமயங்களில்  தொடர்ச்சி விட்டுவிடும்.

எஸ்.ஐ.பி தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது,  இடையில் ஓரிரு மாதங்கள் என்னால் செலுத்த முடியவில்லை என்றால் ஏதும் பிரச்னை ஆகிவிடுமா என்ற கேள்வியும் உங்கள் மனதில் எழும். அவ்வாறு ஓரிரு மாதங்கள் செலுத்த முடியாமல் தவறும்போது,  மியூச்சுவல் ஃபண்டிலிருந்து உங்களுக்கு ஏதும் அபராதம் விதிக்கப்படாது. உங்கள் வங்கி தான், உங்கள் கணக்கில் பணம் இல்லாமலிருந்து இ.சி.எஸ் (ECS) மறுக்கப்பட்டதற்காக (reject) அபராதம் விதிக்கும்.

ஒரு மாதம் பணம் கட்டத் தவறினாலும், மியூச்சுவல் ஃபண்டுகள் அடுத்த மாதத்திலிருந்து உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து ஆட்டோ மெட்டிக்காக பணம் எடுத்து விடும். நீங்கள் கட்டத் தவறிய தொகையை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் திரும்ப எடுக்காது.  வேண்டுமானால்,  நீங்கள் ஒரு செக் கொடுத்து அல்லது ஆன்லைன் மூலமாக கட்டாமல் தவறவிட்ட தொகையை மீண்டும் கட்டலாம்.

ஐசிஐசிஐ போன்ற சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் எஸ்.ஐ.பி பாஸ் (pause) வசதியை அறிமுகப்படுத்தியுள்ளன - எஸ்.ஐ.பி முதலீட்டில் ஒரு முறை 1 – 3 மாதங்களுக்கு பாஸ் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம்.

சில மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், தொடர்ச்சியாக மூன்று முறை எஸ்.ஐ.பி தொகை உங்கள் வங்கிக் கணக்கில் இல்லாமல் போகும்பட்சத்தில், எஸ்.ஐ.பி-யை கேன்சல் செய்து விடுகின்றன.

எஸ்.ஐ.பி முறையில், உங்களது தேவைக்கு ஏற்றாற்போல முதலீடு செய்வதற்காக சில நல்ல திட்டங்களை பரிந்துரை செய்து உள்ளோம். எஸ்.ஐ.பி என்கிற உன்னதமான முதலீட்டு உபகரணத்தை பயன்படுத்தி   அனைவரும் வளம் பெறுவோம்!

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?

பரிசு மழையில் நனையும் விளையாட்டு வீரர்கள்; வருமான வரி உண்டா?



உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாவான ரியோ ஒலிம்பிக் போட்டி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்த திருவிழாவில் நமது இந்திய அணி ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் 67வது இடம் பிடித்தது அனைவருக்கும் தெரிந்ததே.

ஆனால், மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டன் போட்டியில் பி.வி. சிந்து வெள்ளி பதக்கத்தையும், மகளிர் 58 கிலோ எடைப் பிரிவு மல்யுத்தப் போட்டியில் சாக்‌ஷி மலிக் வெண்கலப் பதக்கத்தையும் வென்று இந்தியாவின் பதக்க தாகத்தை தணித்ததால் இவர்களுக்கு பணம், கார், வீடு என பரிசு மழையில் நனைந்து வருகிறார்கள்.

ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியாவின் பெயராவது இடம் பெறுமா என ஏங்கிக்கொண்டு இருந்த நேரத்தில் தங்களுடைய திறமையை உலகிற்கு நிரூபித்து இந்தியாவுக்கு பெருமையைத் தேடித் தந்த வீர மங்கைகள் பி.வி.சிந்து மற்றும் சாக்‌ஷி மாலிக்-க்கு ஊக்கத்தொகையாக எவ்வளவு கோடி வேண்டுமானாலும் கொடுக்கலாம். அதில் எந்தவித தவறும் இல்லை.

ஆனாலும், "விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் கோடிக்கணக்கான பரிசுகளுக்கு வருமான வரி பிடித்தம் உண்டா?" என்பது குறித்து சென்னை, சுண்ணாம்புகொளத்தூரைச் சேர்ந்த விகடன் வாசகர் ஒருவர் இது குறித்து எங்களிடம் கேள்வி எழுப்பினார். இவருடைய கேள்வி சரியா? விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத் தொகைகளைப் பற்றி எல்லாம் பேச வேண்டுமா என்பதை தவிர்த்து இது குறித்து உண்மையான விவரம் தெரிந்துக்கொள்ள கோவையைச் சேர்ந்த ஆடிட்டர் ஜி.கார்த்திகேயனிடம் கேட்டோம்.

"விளையாட்டு வீரர்களுக்கு வருமானம் என்றாலே அவர்களுக்கும் வரி பிடித்தம் என்பது நிச்சயம் உள்ளது. இந்தியாவில் பணமாக பரிசுத் தொகை கிடைத்தால் வருமான வரியாக 30% செலுத்த வேண்டும். இதுவே பிஎம்டபுள்யூ அல்லது மெர்சிடிஸ் பென்ஸ் கார் என ஒரு பொருளாக விளையாட்டு வீரர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டால் அதற்கான தற்போதைய சந்தை மதிப்பு எவ்வளவு உள்ளதோ அதற்கு ஏற்ப வரி செலுத்த வேண்டும். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகள் மூலம் வழங்கப்படும் எந்தவிதமான பரிசுத்தொகை அல்லது பொருளுக்கு வரி பிடித்தம் என்பது இல்லை.

வெளிநாடுகளில் நமது நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுத்தொகைக்கும் வருமான வரி செலுத்த வேண்டும். ஆனால், இது நாட்டுக்கு நாடு மாறுபடும். வெளிநாட்டில் நம்முடைய விளையாட்டு வீரர்களுக்கு பரிசுத்தொகை கிடைக்கிறது என்றால் அது அந்த நாட்டின் சட்டத்தைப் பொறுத்து வரி பிடித்தம் என்பது இருக்கும். சில நாடுகளில் பரிசுத் தொகைக்கு வரி பிடித்தம் என்பதே கிடையாது; ஆனால், இந்தியாவுக்கு வந்தவுடன் அதற்கான வரிப் பணத்தை கட்ட வேண்டும்.

அதேசமயம் சில நாடுகளில் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பரிசுகளுக்கு வரி பிடித்தம் என்பது உள்ளது. வீரர்களுக்கு அந்த நாட்டில் 10 சதவிகிதம் வரி பிடித்ததற்குப்போக இந்தியாவில் மீதி வரி பணத்தை செலுத்த வேண்டும். இரு நாடுகளுக்கும் இடையே வரி மேல் வரி கிடையாது என்ற ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீதி வரிப் பணத்தை இந்தியாவில் கட்ட வேண்டும்" என்றார்.

கோடிக்கணக்கான மக்களின் மனதை கொள்ளைக் கொண்ட வீர மங்கைகள் வருமான வரி பிடித்தம் போக கொஞ்சம் பரிசு மழையிலும் நனையட்டுமே!

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.

பார்ட்னர் தந்த பாடம் - ஏ.சக்திவேல், பாப்பீஸ் நிட்வேர்.



''ஆட்டோமொபைல் படித்துவிட்டு ஒரு நிறுவனத்தில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தேன். அந்த வேலை எனக்கு பிடிக்கவில்லை என்பதால், அதை விட்டுவிட்டு துணி பிஸினஸில் இறங்கினேன். வங்கிக் கடன் கிடைக்காத நிலையில் ரூபாய் ஐம்பதாயிரம் மட்டுமே முதலீடாகப் போட்டு தொழிலைத் தொடங்கினேன். புதிய துறை, போதிய அனுபவமில்லை என்றாலும் ஜெயிக்க வேண்டும் என்கிற வெறியோடு பிஸினஸில் அடியெடுத்து வைத்தேன்.

அந்த நாட்களில் திருப்பூரின் பின்னலாடை உற்பத்தி உள்ளூர் மார்க்கெட்டுகளை மட்டுமே நம்பியிருந்தது. இதையும் தாண்டிய சந்தையிருந்தால்தான் தொழிலில் வெற்றிபெற முடியும் என்பதால், ஏற்றுமதி செய்வோம் என்கிற யோசனையில் உழைக்கத் தொடங்கினேன். உலகத் தரத்திற்குத் தயாரிப்பு இருக்கவேண்டும் என்பதில்  தெளிவாக இருந்தேன். ஆர்டர்கள் தேடிவரும் அளவிற்கு  நாம் வரவேண்டும் என்பதுதான் என் இலக்காக இருந்தது.

தொழில் சிறப்பாகச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் என்னோடு இணைந்து தொழில் செய்தவர் ஏமாற்றியதால் மிகப் பெரிய தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது. எதிர்பாராத இந்த வீழ்ச்சி என்னை நிலைகுலைய வைத்தது. தொழிலில் மீண்டும் நிலைத்து நிற்க முடியுமா என்கிற பயம் ஒருபக்கம். மீண்டும் முதலீடு திரட்டவேண்டும், சந்தையைப் பிடிக்கவேண்டும் என்கிற நெருக்கடி இன்னொரு பக்கம். அதனால் முன்னைவிடவும் தீவிரமாக உழைக்கத் தொடங்கினேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த நேரத்தில்தான். அடுத்த ஐந்தாண்டுகளுக்கு நேரங்காலம் பார்க்காமல் வேலை பார்த்தேன். இந்த விடாப்பிடியான உழைப்பினால் விட்ட இடத்தைப் பிடித்தேன்.

ஆரம்பத்தில் உற்பத்தி சார்ந்த வேலைகள் மட்டுமே எனக்கு தெரியும், மார்க்கெட்டிங் தெரியாது. இதற்காக நானே பல இடங்களுக்கு ஆர்டர் கேட்டுச் சென்று பழகினேன். புதிய டிசைனிங், புதிய டெக்னிக் என ஒவ்வொரு நாளும் புதிது புதிதாக கற்கவேண்டி இருந்தது. இப்போதுகூட வேலை நிமித்தமாக வெளிநாடு செல்கிறபோது இத்துறையில் நிகழும் மாற்றங்கள், புதிய தொழில்நுட்பம் போன்றவற்றை அறிந்துகொள்வதில் முனைப்பு காட்டுவேன்.  

நாமே பார்த்து ஆரம்பித்தத் தொழில் இது. இதில் வெற்றி பெற முடியவில்லை என்றால் வேறு எதிலும் வெற்றி பெற முடியாது என்கிற வேகம்தான் என் வெற்றிக்குக் காரணம். அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதார வீழ்ச்சிகள், மின் தட்டுப்பாடு, சாயப்பட்டறை பிரச்னை போன்ற பிரச்னைகள் வந்தாலும், அதிலிருந்து மீண்டு வருவோம் என்கிற தன்னம்பிக்கைதான் என்னை இன்னும் வேகம் குறையாமல் இயக்கிக்கொண்டிருக்கிறது.'' 

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்

சிப்ஸ் கடை தந்த உற்சாகம் - ஆர். வாசுதேவன், ஹாட் சிப்ஸ்


''மாதம் 6,500 ரூபாய் சம்பளத்தில் கல்லூரிப் பேராசிரியராக வேலை பார்த்தேன். வணிகவியல் துறை பேராசிரியர் என்பதால், உழைப்பால் உயர்ந்த பிஸினஸ்மேன்களின் கதைகளை அடிக்கடி வகுப்பில் சொல்வேன். இந்த கதைகளை நாமே ஏன் கடைப்பிடிக்கக் கூடாது என்று யோசித்து, பகுதி நேரமாக சொந்த தொழில் செய்ய ஆரம்பித்தேன்.

ராயப்பேட்டையில் என் வீட்டுக்கு அருகில் ஒரு மருந்துக் கடை விற்பனைக்கு வந்தது. அதை வாங்கி வெற்றிகரமாக நடத்தியதில் அடுத்து இன்னொரு மருந்துக் கடை, பல்பொருள் கடை என்று விரிவுபடுத்தினேன். இதில் எதிர்பார்த்த அளவு ஏற்றமில்லை. வேறு ஏதாவது செய்ய வேண்டும் என்கிற யோசனை இருந்த சமயத்தில் என் மருந்துக் கடையை ஒட்டிய சந்தில் ஒரு சிப்ஸ் கடை இருந்தது. அந்த கடையில் சிப்ஸ் தயாரித்த விதம்தான் வாடிக்கையாளர்களை விளம்பரம் இல்லாமலே வரவைக்கிறது என்று அறிந்து, அதே மாதிரி ஒரு சிப்ஸ் கடையை நுங்கம்பாக்கத்தில் திறந்தேன். எனக்கான திருப்புமுனை அமைந்தது இந்த சமயத்தில்தான்.
இந்த சிப்ஸ் கடையில் வாடிக்கையாளர் எதிரில் உடனடியாக தயாரிக்கக் கூடிய நொறுக்குத்தீனிகளைத் தந்தோம். அதிலும் முக்கியமாக, வட இந்திய உடனடி சாட் உணவுகளைத் தந்தோம். இதில் நல்ல வருமானமும், பெயரும் கிடைக்கவே, 1992-ல் நான் பார்த்துவந்த ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு, முழுநேரமாக பிஸினஸ்மேன் ஆனேன்.
என் முதல் ஓட்டலை நுங்கம்பாக்கம் பகுதியில் தொடங்கினேன். பொதுவாக ஓட்டலுக்கு வருபவர்களை உட்கார வைத்து பரிமாறுவது வழக்கம். ஆனால், நான் வாடிக்கையாளர் சுயசேவை என்று தொடங்கினேன். இதன் மூலம் கடையின் பணியாளர் எண்ணிக்கை குறைவதால், வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் உணவைத் தரமுடிந்தது. இளைய தலைமுறையின் ரசனைக்கேற்ப ஓட்டலை நடத்த ஆரம்பித்ததிலிருந்து என் ஓட்டலின் வளர்ச்சி, வேகம் கொண்டது.
முதலில் சென்னையிலேயே வேறுவேறு பகுதிகளில் ஓட்டல்களைத் தொடங்கினேன். பிறகு பெங்களூர், சிங்கப்பூரிலும் ஓட்டலைத் தொடங்கி இன்று துபாய் வரை செல்ல திட்டமிட்டு வருகிறோம். மொத்தமாக 18 ஓட்டல்களில் ஆண்டு டேர்னோவர் 50 கோடி ரூபாயைத் தாண்டிவிட்டது.
பேராசிரியராக எனது பணியினைத் தொடர்ந்திருந்தால் இப்போதும் மாதச் சம்பளம் வாங்கிக்கொண்டு, நல்ல மாணவர்களை உருவாக்கி இருந்திருப்பேன். ஆனால், இன்று என் நிறுவனத்தில் சுமார் 1,500 பேர் வேலை செய்கிறார்கள். எனக்காக மட்டுமின்றி, அவர்களுக்காகவும் நான் உழைக்கிறேன்!''.  

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.

நெட்வொர்க் என் பலம்- சி.அம்பிகாபதி, ஃபாஸ்ட் டிராக்.




''கல்லூரியில் படிக்கும்போதே வீடு வீடாக வீடியோ கேசட் வாடகைக்கு விட்டு சம்பாதிப்பேன். இதன் மூலம் எங்கள் பகுதி மக்களோடு எனக்கு நல்ல தொடர்பு இருந்தது. கேபிள் டி.வி வந்தபோது அவர்கள் எல்லோருமே என்னை அந்த தொழிலை செய்யச் சொன்னார்கள். அதற்குத் தேவையான டிஷ், ஒயர்கள் வாங்ககூட என்னிடம் பணம் இல்லை.


டெபாசிட் பணம் திரட்டி இறங்கலாம் என்று நினைத்த நான் எங்கள் பகுதி மக்களிடம் ஆயிரம் ரூபாய் கேட்டேன். இன்னொரு பெரிய நிறுவனம் ஐநூறு ரூபாய் டெபாசிட் தந்தாலே இணைப்பு தருவதாகச் சொன்னது. ஆனால், எங்கள் பகுதி மக்கள் ஒவ்வொருவரும் 1,500 ரூபாய் தந்து என்னை தொழில் தொடங்க சொன்னார்கள். அதுதான் என் வாழ்வின் முதல் திருப்புமுனை.
அடுத்து வேறு ஏதாவது ஒரு தொழில் தொடங்க யோசித்தபோது, என் நண்பர்கள் கால் டாக்ஸிகளுக்கான வயர்லெஸ் திட்டம் பற்றி சொன்னார்கள். இதற்காக   பெங்களூருவுக்குப் போனேன். கால் டாக்ஸிகளுக்கு அங்கு இருந்த வரவேற்பை பார்த்த நான், அதை ஏன் சென்னையில் செய்யக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால், மோட்டார் தொழிலை பழகாமல் செய்யக்கூடாது என பலரும் பயமுறுத்தினார்கள். நான் துணிந்து என் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து ஐம்பது கார்களை வாங்கி நிறுவனத்தைத் தொடங்கினேன். ஆரம்பத்தில் தொழில் சிறப்பாக இல்லை. மூன்று ஆண்டுகள் தொடர்ந்து நஷ்டம். ஐம்பது கார்களை நூறு கார்களாகப் பெருக்கியும் எதிர்பார்த்த வளர்ச்சி இல்லை. எப்போதும் ஏதாவது ஒரு பிரச்னை வந்துகொண்டே இருந்தது.
இதை எப்படி சமாளிப்பது என்று யோசித்தேன்.  அந்த நூறு கார்களையும் ஓட்டுபவர்களுக்கே சொந்தமாக்கிவிடுவது என முடிவெடுத்தேன். ஆரம்பத்தில் ஓட்டுபவர்களுக்கே இதில் நம்பிக்கை இல்லை. போகப் போக இத்திட்டம் நல்ல பலன் தந்தது. ஓட்டுநர்களுக்கும் நல்ல வருமானம் கிடைக்க, நிறுவனமும் வளர்ச்சி கண்டது. இந்த நெட்வொர்க்தான் என் பலம்.
இதன்பிறகுதான் திருச்சி, கோவை, பெங்களூரு, ஹைதராபாத் என விரிவடைந்தோம். இன்று சுமார் ஆறாயிரம் கார்கள் எனது நிறுவனத்தின் மூலமாகச் சுற்றி வருகின்றன. கால் டாக்ஸி நிறுவனம் வெற்றிகரமாகச் செயல்பட சொந்த வாகனங்களை வைத்திருக்கவேண்டும் என்கிற விதிமுறைகளை உடைத்ததே எங்களது இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம். இன்று வெளிநாட்டு நிறுவனங்கள் வந்தால்கூட எங்களால் போட்டி போட முடியும்!''